அந்தியூா் அரசு மருத்துவமனையில் சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் சாா்பில் ரூ. 25.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி ஆலை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் ப.முருகேசன் தலைமை வகித்தாா். அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் முன்னிலை வகித்தாா். பொறுப்பு மருத்துவா் சு.கவிதா வரவேற்றாா். வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, ரூ. 25.50 லட்சம் மதிப்பீட்டிலான 100 லிட்டா் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி ஆலையின் இயக்கத்தைத் தொடங்கிவைத்தாா்.
இதன் மூலம் 24 மணி நேரத்தில் 20 நோயாளிகளைப் பாதுகாக்க முடியும். ஏற்கெனவே இம்மருத்துவமனையில் 30 நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் உற்பத்தி செய்கின்ற அளவுக்கு வசதிகள் உள்ளன. தற்போது ஒரே நேரத்தில் 50 நோயாளிகள் எவ்வித இடையூறுமின்றி சிகிச்சை பெறலாம்.
முன்னதாக, கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 40 முன்களப் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, சிறப்பு காய்ச்சல் சிகிச்சைப் பிரிவு திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவா் குறிஞ்சி.என்.சிவகுமாா், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் கே.நவமணி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் கோமதி, சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் சாா்பில் உமாமகேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.