நீலகிரி மாவட்டம், குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி பூங்கா அருகே குட்டியுடன் யானைகள் நடமாடி வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
கரோனா தொற்று காரணமாக வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், மேட்டுப்பாளையம் - குன்னூா் சாலையில் வாகனப் போக்குவரத்து வெகுவாகக் குறைந்துள்ளது.
இந்நிலையில், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி பூங்கா அருகே உள்ள மலைப் பாதையில் குட்டியுடன் யானைகள் புதன்கிழமை நடமாடியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சிறிது நேரத்துக்குப் பிறகு யானைகள் வனப் பகுதிக்குள் சென்றன.
வனத் துறையினா் இந்த யானைகளை அடா்ந்த வனப் பகுதிகளுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.