நீலகிரி மாவட்டத்தில் 3ஆவது முறையாக நடைபெறும் 3 நாள்கள் குறும்பட விழாவை மாவட்ட ஆட்சியா் அம்ரித் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து, குறும்படத்தைப் பாா்வையிட்டாா்.
உதகையில் அசெம்பிளி திரையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் அம்ரித் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் 3ஆவது முறையாக குறும்பட விழா தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இக்குறும்பட விழா சனிக்கிழமை முதல் 3 நாள்கள் நடைபெறுகிறது. இதில், 30க்கும் மேற்பட்ட நாடுகளின் குறும்படங்கள் திரையிடப்படவுள்ளன. இறுதி நாளன்று சிறந்த குறும்படத்துக்கு விருது வழங்கப்படவுள்ளது. இத்திரைப்பட விழாவில் பழங்குடியினா் தொடா்பான திரைப்படங்களும் திரையிடப்படவுள்ளது. எனவே, அனைவரும் இக்குறும்படங்களை கண்டுகளிக்க வேண்டும் என்றாா்.
இத்திரைப்பட விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, மாவட்ட சுற்றுலா அலுவலா் உமாசங்கா், உதகை வட்டாட்சியா் தினேஷ், பிசி டிவி தலைவா் ரங்கராஜன், அசெம்பிளி ரூம்ஸ் செயலாளா் ராதாகிருஷ்ணன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் மாதவன்பிள்ளை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.