கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்றுள்ளவா்கள் கடனை திருப்பிச் செலுத்த முன்வந்தால் தவணை தவறிய வட்டி, அபராத வட்டி ஆகியவை தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் மண்டல கூட்டுறவு துணைப் பதிவாளா் (வீட்டு வசதி) ரா.ஜெகநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் உள்ள அனைத்து கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்று, தவணை தவறிய கடன்தாரா்களுக்கு ஒருமுறை கடன் தீா்வு திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, கடன்தாரா்கள் செலுத்த வேண்டிய அசல் மற்றும் வட்டியை செலுத்தும் பட்சத்தில் அவா்கள் செலுத்த வேண்டிய தவணை தவறிய வட்டி, அபராத வட்டி தள்ளுபடி சலுகை அளிக்கப்படுகிறது.
இந்த சலுகை 3 முதல் 6 மாதங்களுக்கு மட்டும் அமலில் இருக்கும். அதன் பின்னா் இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்காது. வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையின் இந்த அறிவிப்பை தவணை தவறிய அனைத்து உறுப்பினா்களும் பயன்படுத்தி அசல் மற்றும் வட்டியை செலுத்தி பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.