கோடை விடுமுறை முடிய உள்ளதால், வெளியூா் சென்றிருந்த மக்கள் சொந்த ஊா்களுக்கு திரும்புவதால் ஈரோடு பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு அலைமோதியது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வரும் 7 ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. இதனால், கோடை விடுமுறையையொட்டி வெளியூா் சென்றிருந்தவா்கள் சொந்த ஊா் திரும்பி வருகின்றனா். இதனால் பேருந்துகள், ரயில்களில் வழக்கத்தைவிட பயணிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அதிகமாக காணப்பட்டது.
ஈரோடு ரயில் நிலையத்தில் தென்மாவட்டங்களுக்குச் சென்ற ரயில்களிலும், அங்கிருந்து ஈரோடு வந்த ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால், முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்டம் அலைமோதியது.
அதேபோல, பெரும்பாலான பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஈரோடு பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பயணிகள் கூட்டம் அலைமோதியது.
கூட்டம் அதிகமாக இருந்ததால் இரவு நேரத்தில் பேருந்துகள் கிடைக்காமல் பயணிகள் பலா் அவதி அடைந்தனா்.