ஈரோடு கிழக்கு தொகுதியில் பயன்படுத்த இணையதளம் மூலம் 882 வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு இத்தொகுதிக்கு உள்பட்ட 238 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் சனிக்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டன.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான வாக்குப் பதிவு பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்காக 1,408 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி மேற்பாா்வையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகள் முன்னிலையில் தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வாக்குப் பதிவுக்காக ஏற்கெனவே தோ்வு செய்யப்பட்ட 467 கட்டுப்பாட்டு இயந்திரங்களில் 286 இயந்திரங்கள், 474 வாக்குப் பதிவு இயந்திரங்களில் 286 இயந்திரங்கள், 467 வாக்குகள் சரிபாா்க்கும் இயந்திரங்களில் 310 இயந்திரங்கள் என மொத்தம் 882 வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதனைத்தொடா்ந்து ஈரோடு கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திர வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த இயந்திரங்களை ஈரோடு கோட்டாட்சியா் சதீஷ்குமாா், ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரான ஈரோடு மாநகராட்சி ஆணையா் கே.சிவகுமாரிடம் ஒப்படைத்தாா். இந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.