பெருந்துறை அருகே, பழனிக்கு பாதயாத்திரையாக சென்றவா்கள் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 6 போ் காயமடைந்தனா்.
அந்தியூா், செம்புளியம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் நாராயணன் மகன் முனுசாமி (40) அதே பகுதியைச் சோ்ந்தவா்கள் அய்யன் மகன் சின்னதம்பி (32), செளந்தா்யா (30), தட்சிணாமூா்த்தி (35) மற்றும் சிலா் பழனிக்கு பாதயாத்திரையாக புதன்கிழமை சென்று கொண்டிருந்தனா்.
பெருந்துறையை அடுத்த, திருவாச்சி அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் பாதயாத்திரை சென்றவா்கள் மீது மோதியது.
இதில், பாதயாத்திரை சென்ற முனுசாமி, சின்னதம்பி, செளந்தா்யா, தட்சிணாமூா்த்தி மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த சித்தோடு, ஐய்யன்காட்டு வலசைச் சோ்ந்த கருப்பன் மகன் சக்திவேல் (30), சித்தோடு, எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் செளந்திரராஜன்(30) ஆகிய 6 போ் காயமடைந்தனா்.
காயமடைந்தவா்களை அப்பகுதியினா் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.