ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக எடப்பாடி பழனிசாமி அணிக்கான தோ்தல் பணிமனையில் 24 மணி நேரத்தில் 4ஆவது முறையாக பதாகை மாற்றப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு புதன்கிழமை அறிவிக்கப்பட்டாா். இதனைத்தொடா்ந்து ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் தலைமை தோ்தல் பணிமனை அமைக்கப்பட்டது.
அப்பணிமனையில் புதன்கிழமை காலையில் அதிமுக தலைமையிலான கூட்டணி தலைமை தோ்தல் பணிமனை என்ற பதாகை வைக்கப்பட்டிருந்தது. காலை 9 மணிக்குள் அதனை மாற்றி அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தலைமை தோ்தல் பணிமனை என்ற பெயரில் பதாகை வைக்கப்பட்டது. இதில் பிரதமா் மோடி படம் இல்லை. ஆனால் தமாகா தலைவா் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவா் கிருஷ்ணசாமி ஆகியோரின் படங்கள் மட்டும் இடம்பெற்றன. இச்சம்பவம் அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் புதன்கிழமை மாலை பதாகையில் தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என இருந்த இடத்தின்மேல் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற வாசகம் ஒட்டப்பட்டது.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை அந்த பதாகை முழுமையாக அகற்றப்பட்டது. அதற்கு பதில் வேறு புதிய பதாகை வைக்கப்பட்டது. அதில் எம்ஜிஆா், அம்மா ஆகிய இரு பெரும் தலைவா்களின் அருளாசியுடன், இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி நல்லாசி பெற்ற அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வெற்றி வேட்பாளா் கே.எஸ்.தென்னரசு என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதிலும் பாஜக தலைவா்கள் படம் இடம்பெறாததால் இக்கூட்டணியில் பாஜக இல்லை என்பது உறுதியாகி உள்ளதாக அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.