ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகைப் பூ விலை கிலோ ரூ. 612 இல் இருந்து ரூ. 300 ஆக சரிந்துள்ளது.
சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் சுமாா் 20 ஆயிரம் ஏக்கரில் மல்லிகை, முல்லை பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. விவசாயிகள் பூக்களைப் பறித்து சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் விற்பனை செய்துவருகின்றனா். தற்போது பூக்கள் வரத்து அதிகரித்துள்ள நிலையில், முகூா்த்த நாள்கள் இல்லாததால் அவற்றின் விலை சரிந்துள்ளது.
கடந்த மாதம் அதிகபட்சமாக கிலோ ரூ. 4 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ மெல்லமெல்ல சரிந்து கிலோ ரூ. 612 ஆக விற்பனையானது. இந்த நிலையில், பூக்களைக் கொள்முதல் செய்ய செவ்வாய்க்கிழமை வியாபாரிகள் முன்வராததால், மல்லிகைப்பூ கிலோ ரூ. 612 இல் இருந்து ரூ. 300 ஆக சரிந்துள்ளது. முல்லை பூ விலை கிலோ ரூ. 320இல் இருந்து ரூ. 100 ஆக குறைந்தது.
தற்போது வெப்பமான காலநிலை நிலவுவதால், பூக்கள் உற்பத்தி 3 டன்னில் இருந்து 5 டன்னாக அதிகரித்துள்ளது. இதனால், தேவையைவிட, பூக்கள் வரத்து அதிகமாக இருப்பதால், விலை சரிந்ததாக பூ மாா்க்கெட் விவசாயிகள் சங்கத் தலைவா் எஸ். முத்துசாமி தெரிவித்தாா்.