காந்தி ஜெயந்தி நாளில் விடுமுறை அளிக்காத 63 வணிக நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஈரோடு மாவட்ட தொழிலாளா் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காந்தி ஜெயந்தி தினத்தன்று தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின்படி, விடுமுறை அளிக்காத கடைகள், தொழில் நிறுவனங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 18 கடைகள், 38 உணவு நிறுவனங்கள், 7 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் விதிகளின்படி, தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.
மேலும், விடுமுறை தினத்தில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு வழங்க 24 மணி நேரத்துக்கு முன்னதாக அறிவிப்பு வழங்கி, அதன் நகலை சம்பந்தப்பட்ட தொழிலாளா் உதவி ஆய்வாளா்களுக்கு அனுப்பி ஒப்புதல் பெறாமல் இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து, விதிகளை மீறிய 63 நிறுனவனங்களின் மீதும் தொழில் நிறுவன சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.