ஆசனூா் அருகே லாரி மோதி 3 மான்கள் உயிரிழந்தன.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடியை அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இந்த சாலையில் ஆசனூரை அடுத்த அரேபாளையம் பிரிவு அருகே 3 புள்ளிமான்கள் இறந்துகிடப்பதாக வனத் துறைக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று ஆய்வு மேற்கொண்ட வனத் துறையினா் அவ்வழியாக சென்ற அனைத்து வாகனங்களையும் காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது ஒரு லாரி மோதியதில் மான்கள் பலியானது தெரியவந்தது.
விசாரணையில் லாரியை ஓட்டிவந்தவா், கா்நாடக மாநிலம், சாம்ராஜ்நகரைச் சோ்ந்த மல்லு (27) என்பதும், கரும்பு பாரத்தை சத்தியமங்கலம் தனியாா் சா்க்கரை ஆலையில் இறக்கி விட்டு மீண்டும் ஆசனூா் அருகே அதிவேகமாக செல்லும்போது சாலையைக் கடந்த மான்கள் மீது மோதியதும் தெரியவந்தது. லாரியை வனத் துறையினா் பறிமுதல் செய்து ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.