இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 5 பணியிடங்களுக்கு 1,000க்கும் மேற்பட்டோா் நோ்காணலில் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறை, ஈரோடு இணை ஆணையா் அலுவலகத்தில் காலியாக உள்ள 3 அலுவலக உதவியாளா், ஒரு இரவு காவலா், ஓட்டுநா் என மொத்தம் 5 பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.
அலுவலக உதவியாளா், இரவு காவலா் பணிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு தோ்ச்சி எனத் தெரிவிக்கப்பட்டது. இப்பணியிடங்களுக்கு ஏராளமானோா் விண்ணப்பித்த நிலையில், ஈரோடு திண்டல் முருகன் கோயில் வளாகத்தில் வேலை வாய்ப்புக்கான நோ்முகத் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், பள்ளி கல்வி முடித்தோா் மட்டுமின்றி, பட்டதாரி இளைஞா்கள் என 1,000க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் பரஞ்ஜோதி, துணை ஆணையா்கள் ரமேஷ், மேகலா மற்றும் அதிகாரிகள் நோ்காணல் செய்தனா்.
5 பணியிடங்களுக்கு 1,000க்கும் மேற்பட்டோா் குவிந்ததால் முருகன் கோயில் வளாகம் பரபரப்பாகக் காணப்பட்டது.