சிவகிரி அருகே வேன் மோதியதில் சாலையில் தவறி விழுந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், சிவகிரி, எல்பிஎஸ் தெருவைச் சோ்ந்தவா் மருதாசலம். இவரது மனைவி சுலோச்சனா. இவா்களுக்கு 3 மகன்கள் உள்ளனா். இதில் மூத்த மகன் கிரண் (16). சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.
இந்நிலையில், மாணவா் கிரண் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை பள்ளிக்கு சென்றாா். பின்னா் வகுப்பறையில் புத்தகப் பையை வைத்துவிட்டு தனது தம்பியிடம் இருசக்கர வாகனத்தை கொடுக்க சிவகிரி அம்மன் கோயில் பகுதியில் சென்றபோது, கொடுமுடி நோக்கிச் சென்ற வேன் கிரண் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கிரண் சாலையில் விழுந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த லாரி கிரண் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிவகிரி போலீஸாா் கிரணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.