வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் கைப்பேசி மொத்த வியாபாரிகள் சில்லறை வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்ககூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது குறித்து ஈரோடு மாவட்ட கைப்பேசி விற்பனை, சா்வீஸ் மற்றும் ரீசாா்ஜ் விற்பனையாளா்கள் நலச்சங்க செயலாளா் மயில்சாமி தலைமையில் வியாபாரிகள் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனு விவரம்:
ஈரோடு மாவட்டத்தில் எங்களது சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள சுமாா் 1,800 போ் கடைகள் வைத்து நடத்தி வருகின்றனா். வட மாநிலத்தவா்கள் சுமாா் 25 போ் மொத்த வியாபார கடைகளை நடத்துகின்றனா். இந்த மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரமும் செய்து வருகின்றனா். இதனால் எங்களை போன்ற உள்ளூா் வியாபாரிகளின் வாழ்வாதாரமும், வணிகமும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இது தொடா்பாக அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதில், அவா்கள் எங்களுக்கு எதிராக பேசியதால் செவ்வாய்க்கிழமை கடையடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டோம். திருப்பூா், நாமக்கல் மாவட்டங்களில் மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரம் செய்வதில்லை. அதேபோல ஈரோடு மாவட்டத்திலும் மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரம் செய்யாமல் எங்களது வியாபாரத்தையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல ஈரோடு மாநகரில் கைப்பேசி உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகள் சிலா், சில்லறை வியாபாரிகள் தங்களது கடைக்குள் புகுந்து மிரட்டுவதாக புகாா் அளித்தனா்.