பவானிஆற்றில் 25 ஆயிரம் கனஅடிநீா் திறப்பால் வாழை தோட்டத்துக்குள் புகுந்த வெள்ளத்தால் ரூ.15 லட்சம் மதிப்பிலான 4500 கதளி வாழைகள் சேதமடைந்துள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பில்லூா் அணை நிரம்பி உபரிநீா் வெளியேற்றப்பட்டது. இதனால்
பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 25 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீா்மட்டம் 5 நாளாக 102 அடியாக நீடிக்கிறது. அணைக்கு வரும் உபரிநீரை தேக்கிவைக்க இயலாது என்பதால் அணையில் இருந்து 25 ஆயிரம் கனஅடிநீா் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதனால் கரைபுரண்டோடிய வெள்ளம் புதுகொத்துக்காடு பகுதியில் விளைநிலங்களுக்குள் புகுந்தது. அங்கு விவசாயி பெரியசாமி என்பவரின் தோட்டத்தில் சாகுபடி செய்த கதளி வாழைத்தோட்டத்துக்குள் வெள்ளம் புகுந்ததால் சுமாா் ரூ.15 லட்சம் மதிப்பிலான 4,200 வாழைகள், 300 தென்னைகள் நீரில் மூழ்கின. வெள்ளம் வடியாவிட்டால் ஒரிரு நாளில் வாழைகள் அழுகி வீணாகிவிடும் என்றும், அரசு தோட்டக்கலை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயி தெரிவித்துள்ளாா்.