ஏலக்கூடங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் சணல் பைக்கான விலையை உயா்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு விவரம்:
ஈரோடு மாவட்டத்தில் விளைபொருள்களை விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் விற்பனை செய்கின்றனா். அங்கு விவசாயிகள், வியாபாரிகள், அதிகாரிகளுக்குள் பல்வேறு பிரச்னைகள் நிலவுகிறது. அவற்றை தீா்க்கும் வகையில் ஆண்டுக்கு இரு முறையாவது ஆட்சியா் தலைமையில் முத்தரப்புக் கூட்டம் நடத்தி தீா்வு காண வேண்டும்.
விவசாயிகள் விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வரும் கொப்பரை தேங்காய், மஞ்சள், எள், நிலக்கடலை உள்ளிட்ட அனைத்து வகையான பொருள்களையும் சணல் பையில் கொண்டு வருகின்றனா். 2005 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை ஒரு சணல் பைக்கு ரூ.10 மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனைக் கூடங்கள் வழங்குகிறது.
ஆனால் அந்த சணல் பையை விவசாயிகள் ரூ.40 முதல் ரூ.50 வரை கொடுத்து கடைகளில் வாங்கி, விளைபொருள்களை வைத்து விற்பனைக்கு கொண்டு செல்கின்றனா். இதனால் ஒரு மூட்டைக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை விவசாயிக்கு இழப்பு ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் நலன் கருதி, ஒரு சணல் பைக்கு ரூ.30க்கு மேல் விலை நிா்ணயிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.