ஈரோட்டில் கடந்த வாரத்தில் கிலோ ரூ. 150 வரை விற்கப்பட்ட தக்காளி படிப்படியாக விலை குறைந்து சனிக்கிழமை ரூ. 50க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவ மழை பரவலாகப் பெய்து வருகிறது. இதன் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்து விலையும் அதிகரித்தது. குறிப்பாக தக்காளி விலை மிகவும் அதிகமாக இருந்தது. தினமும் 7,000 பெட்டிகள் வர வேண்டிய இடத்தில் 2,000 பெட்டிகள் மட்டுமே வந்தது. கடந்த வாரம் ஈரோடு வஉசி பூங்கா காய்கறிச் சந்தையில் தக்காளி கிலோவுக்கு ரூ. 130 வரை விற்பனையானது. வெளியில் சில்லறை விலையில் ரூ. 150 வரை விற்பனையானது.
இந்நிலையில், கடந்த 3 நாள்களாக ஈரோடு காய்கறிச் சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால், தக்காளி விலையும் சரிந்தது. தாளவாடி, கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் இருந்து 10 லாரி லோடு அளவுக்கு தக்காளி சனிக்கிழமை வந்தது. 25 கிலோ தக்காளி பெட்டி ரூ. 900 முதல் ரூ. 1000 வரை விற்பனையானது. 14 கிலோ பெட்டி ரூ. 400 முதல் ரூ. 500 வரை விற்பனையானது. ஒரு கிலோ தக்காளி ரூ. 30 முதல் ரூ. 50 வரை விற்பனையானது. சில்லறையில் ரூ. 50 முதல் ரூ. 60 வரை விற்பனையானது. தக்காளி விலை சரிவால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.