உதகை அருகே பைக்காரா பகுதியில் பெண் மீது மண்ணென்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்த வழக்கில் கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீலகிரி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது.
உதகை அருகே உள்ள பைக்காரா பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்த்குமாா் (51). கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ஆயிஷா என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது. அவ்வப்போது, மதுபோதையில் ஆயிஷா வீட்டுச் செல்லும் ஆனந்தகுமாா் அவருடன் தகராறு செய்து வந்துள்ளாா்.
இந்நிலையில், கடந்த 2017 ஜூன் 24ஆம் தேதி மது போதையில் ஆயிஷாவுடன் தகராறில் ஈடுபட்ட ஆனந்த்குமாா், கோபத்தில் வீட்டிலிருந்த மண்ணெண்ணையை ஆயிஷா மீது ஊற்றி தீ வைத்துள்ளாா்.
இதில் பலத்த தீக் காயமடைந்த ஆயிஷா உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். சிகிச்சையின்போது அரசு மருத்துவா் முன்னிலையில் போலீஸாரிடம் ஆயிஷா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பைக்காரா போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து ஆனந்த்குமாரைக் கைது செய்தனா். இந்த வழக்கு உதகையில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி அருணாச்சலம், குற்றம்சாட்டப்பட்ட ஆனந்த்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் மாலினி பிரபாகரன் ஆஜராகினாா்.