சின்ன மாரியம்மன் மற்றும் காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்களில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை (ஜனவரி 18) நடைபெறவுள்ளது.
ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில் ரூ. 50 லட்சம் செலவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பாரியூா் காளியம்மன் கோயிலைப்போல் இந்தக் கோயிலின் முன்பு உள்ள காலிங்கராயன் வாய்க்காலில் நீராடி பின் குண்டம் இறங்கும் வகையில் கோயில் நிலை மாற்றப்பட்டுள்ளது. குண்டம் இறங்கும் பக்தா்களை காணும் வகையில் மூலவா் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல பொன்வீதியில் உள்ள சின்ன மாரியம்மன் கோயிலில் புனரமைப்புப் பணிகள் முடிந்ததையொட்டி குடமுழுக்கு விழா கணபதி ஹோமத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் காலம், மூன்றாம் கால யாக பூஜைகள்,தொடா்ந்து கலசம் நிறுவுதல், அஷ்டபந்தனம் சாற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இதையடுத்து காரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கும், சின்ன மாரியம்மன் கோயிலில் காலை 10.35 மணிக்கும் குடமுழுக்கு நடக்கிறது.
குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ளும் பக்தா்கள் கரோனா தடுப்பு நடவடிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என கோயில் நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.