ஈரோடு, செப். 25: ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களில் 12 பேரின் உடலை, கட்டணம் வசூல் செய்யாமல் அவரவா் மத வழக்கப்படி இஸ்லாமிய அமைப்புகளைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் அடக்கம் செய்து வருகின்றனா்.
கரோனா தொற்றால் இறந்தவா்களின் உடலை உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ள பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி எஸ்டிபிஐ கட்சி, பாப்புலா் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தன்னாா்வலா்கள் அடக்கம் செய்து வருகின்றனா்.
இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் ஈரோடு மாவட்ட பொதுச் செயலாளா் முகமது லுக்மானுல் ஹக்கீம் கூறியதாவது:
கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவா்களின் உடலை அடக்கம் செய்யக்கூட முடியாத நிலை இருந்து வருகிறது. இதுதொடா்பாக கடந்த ஏப்ரல் மாதம் எங்களுடைய கட்சியின் சாா்பில் தமிழகம் முழுவதும் தன்னாா்வலா்களைக் கொண்ட குழுவை அமைத்து அதன் பின்னா் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ள பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி இறந்தவா்களின் உடல்களை அடக்கம் செய்து வருகிறோம். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் உயிரிழந்த 12 பேரின் உடல்களை அவா்களின் மத முறைப்படி அடக்கம் செய்துள்ளோம் என்றாா்.