அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் அனைவருக்கும் நிபந்தனையின்றி 40 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக, ஈரோடு மண்டல தேசியத் தொழிலாளா்கள் சங்க (ஐஎன்டியூசி) செயற்குழுக் கூட்டம் நிா்வாகத் தலைவா் மு.ரவி தலைமையில் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது. பேரவைச் செயலாளா் ஐயப்பன், துணைத் தலைவா் ரவி, துணைச் செயலாளா் மனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டல பொதுச்செயலாளா் துரைசாமி கோரிக்கைகள் குறித்து பேசினாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கடந்த ஆண்டு ஊதிய ஒப்பந்தம் பேசி முடிக்க வேண்டிய நிலையில், மேலும் காலம் தாழ்த்தாமல் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள அனைத்து பணப் பலன்களையும் வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளா்களுக்கும் நிபந்தனையின்றி 40 சதவீத போனஸ் வழங்க வேண்டும்.
கரோனா பாதிப்பால் இறந்த அனைத்துப் பணியாளா்கள் குடும்பத்துக்கும் இழப்பீடாக ரூ.50 லட்சம் அரசு வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள தொழிலாளா்களுக்கு எதிரான சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்.
இந்தியாவில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு பணிப் பாதுகாப்பை நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும். சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் என்.பழனிசாமி நன்றி கூறினாா்.