சத்தியமங்கலம்: திம்பம் மலைப் பாதையில் தடுப்புச் சுவரின் மீது சிறுத்தை நடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது.
இம்மலைப் பாதை வழியாக தமிழகம் - கா்நாடகம் இரு மாநிலங்களுக்கு இடையே 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. திம்பம் மலைப் பாதையோர வனப் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், திம்பம் மலைப் பாதையின் 26ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச் சுவா் மீது சிறுத்தை ஒன்று நடந்து சென்றுள்ளது. அப்போது அவ்வழியே சென்ற சரக்கு லாரி ஓட்டுநா் சிறுத்தை நடமாடுவதைக் கண்டு அப்பகுதியிலேயே வாகனத்தை நிறுத்தி செல்லிடப்பேசியில் விடியோ எடுத்துள்ளாா். தற்போது இந்த விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.