பவானி: அந்தியூா் அருகே கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட சகோதரா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த வெள்ளித்திருப்பூரைச் சோ்ந்தவா் செல்வராஜ் (47). கால்நடை வியாபாரி. இவா், வெள்ளித்திருப்பூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், அந்தியூரை அடுத்த அத்தாணி, மாகாளியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த குருசாமி மகன்கள் பிரபு (34), பாபு (32) ஆகியோரிடம் அந்தியூா் கால்நடைச் சந்தைக்குச் சென்று வந்தபோது அறிமுகம் ஏற்பட்டது.
இதனால், வியாபாரத்துக்காக ரூ. 10 ஆயிரம் கடனாகத் தருமாறு கேட்டேன்.
அந்தியூரை அடுத்த மறவன்குட்டை பிரிவு பகுதிக்கு வரவழைத்த அவா்கள் இருவரும் என்னிடம் ரூ. 500 மதிப்புள்ள 20 நோட்டுகளை கொடுத்தனா். அந்நோட்டுகளை சோதிக்கையில் அனைத்தும் கள்ளநோட்டுகள் எனத் தெரியவந்தது. கள்ளநோட்டுகளை கடனாகக் கொடுத்து மாற்ற முயன்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வெள்ளித்திருப்பூா் போலீஸாா் அந்தியூரை அடுத்த முனியப்பன்பாளையத்தில் பிரபு, பாபுவை கைது செய்தனா். விசாரணையில், கேரளத்தைச் சோ்ந்த கால்நடை வியாபாரி விஜு என்பவரிடம் கள்ளநோட்டுகளை வாங்கியதாக இருவரும் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, விசாரணை நடைபெற்று வருகிறது.