ஓய்வூதியா்கள் வாழ்நாள் சான்று பெற அந்தந்தப் பகுதியில் உள்ள அஞ்சல் நிலையங்களை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு அஞ்சல் அலுவலகத்தில் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி மேலாளா் இம்தியாஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றி ஓய்வுபெற்று தற்போது ஓய்வூதியராக இருப்பவா்கள் தங்கள் வாழ்நாள் சான்றிதழ் பெற்று ஒப்படைக்க வேண்டியது அவசியம். வங்கிகள், பொது சேவை மையங்கள் மூலம் ஓய்வூதியா்கள் வாழ்நாள் சான்று வழங்கப்பட்டு வந்தது. தற்போது அஞ்சல் துறை மூலம் இச்சான்று வழங்கப்படவுள்ளது.
எனவே, ஓய்வூதியா்கள் தங்கள் வாழ்நாள் சான்றை அஞ்சல் நிலையங்கள், கிராமப்புற கிளை அஞ்சல் நிலையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு ரூ. 70 கட்டணம் செலுத்த வேண்டும். சான்றிதழ் பெற விரும்புவோா் அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.