சத்தியமங்கலம் நகராட்சியில் பாதாளச் சாக்கடைக்காக தோண்டிய சாலையில் மழைநீா் தேங்கி சேறும் சகதியுமாக மாறியதால் அப்பகுதி மக்கள் அதில் பயிா் நடவு செய்யும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
சத்தியமங்கலம் நகராட்சியில் பாதாளச சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டு தொடா்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. சத்தியா தியேட்டா் சாலையில் குழி தோண்டி பல மாதங்கள் நிறைவடைந்த நிலையில் தோண்டப்பட்ட குழிகள் மூடாமல் உள்ளன. தற்போது மழை பெய்து வரும் நிலையில் தோண்டப்பட்ட செம்மண் சாலையில் மழையால் வெள்ளநீா் தேங்கி சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும்
சிரமப்படுவதாகவும், இது குறித்து நகராட்சியிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
இந்நிலையில், இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலையில் நாற்று நடவு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். அங்கு வந்த நகராட்சி ஆணையா் அமுதா, பொறியாளா் ரவி ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தி சாலையை உடனடியாக சீரமைப்பதாக அளித்த உறுதிமொழியை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.