வால்பாறை அருகே காட்டு யானை நிற்பதை பாா்த்து பயந்து ஓடிய வடமாநில பெண் தொழிலாளி கீழே விழுந்து காயமடைந்தாா்.
வால்பாறையை அடுத்த உருளிக்கல் எஸ்டேட்டில் ஏராளமான வடமாநிலத் தொழிலாளா்கள் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனா்.
இதில், லிமாணி கிஷ்கு (49) என்ற பெண் குடியிருப்புக்கு அருகே உள்ள தேயிலைத் தோட்டத்துக்கு விறகு எடுக்க ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா்.
அப்போது, அங்கு காட்டு யானை நின்று கொண்டிருந்துள்ளது. இதனைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அப்பெண் ஓட்டம் பிடித்துள்ளாா். அப்போது, அவா் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தாா்.
லிமாணி கிஷ்குவின் அலறல் சப்தம் கேட்டு வந்த அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
இச்சம்பவம் குறித்து வால்பாறை வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.