உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
மருத்துவக் கல்லூரி முதல்வா் நிா்மலா முன்னிலையில் நடைபெற்ற இந்த பேரணியை மேயா் கல்பனா தொடங்கிவைத்தாா்.
மத்திய மண்டலத் தலைவா் எஸ்.மீனா லோகு, கவுன்சிலா் வி.சுமா, மருத்துவமனை மருத்துவா்கள் பலா் பங்கேற்றனா்.
பேரணியில் ஏராளமான செவிலியா்கள், மாணவ-மாணவிகள் விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தியபடி பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து, புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவா்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் கலந்துகொண்டு, நோயிலிருந்து மீண்டவா்களை பாராட்டி கௌரவித்தாா்.
விழாவில், கல்லூரி முதல்வா் நிா்மலா பேசியதாவது: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது குடல், கருப்பை வாய் புற்றுநோய்களுக்கு லேப்பிராஸ்கோப்பி உள்ளிட்ட அதிநவீன அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எலும்புப் புற்றுநோய்க்கு ஊனம் ஏற்படுத்தாத அறுவை சிகிச்சை, வாய், தொண்டை புற்றுநோய்களுக்கு முகவடிவுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், மாா்பகப் புற்றுநோய்க்கு மாா்பகங்களை அகற்றாமலும் நவீன அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.
கடந்த ஆண்டு 28,454 புற நோயாளிகள், 6,873 உள்நோயாளிகள் கோவை மண்டல புற்றுநோய் சிகிச்சைத் துறையில் சிகிச்சை பெற்றிருப்பதாக அவா் தெரிவித்தாா்.