கோவை மாநகராட்சிப் பகுதிகளில் ( பிப்ரவரி 5) வள்ளலாா் தினத்தன்று இறைச்சி விற்பனை செய்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வள்ளலாா் ராமலிங்க அடிகளாா் நினைவு தினத்தையொட்டி, பிப்ரவரி 5 ஆம் தேதி தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே, கோவை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி, பன்றி இறைச்சிக் கடைகளை மூடும்படி தெரிவிக்கப்படுகிறது.
அன்றைய தினம் கோவை மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் உக்கடம், சத்தி சாலை, போத்தனூா் அறுவை மனைகள் மற்றும் துடியலூா் மாநகராட்சி இறைச்சிக் கடைகள் செயல்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
உத்தரவை மீறி செயல்படுவோா் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.