கோவையில் தகராறில் இளைஞா் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இது தொடா்பாக போலீஸாா் கூறியதாவது: கோவை தெலுங்குபாளையம் வேடம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி (24), நகைப் பட்டறை தொழிலாளியான இவருக்கும், ராஜவீதியில் ஒரு கடையில் வேலை செய்த இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இருவரும் வீட்டுக்குத் தெரியாமல் கோவையிலிருந்து சென்னைக்கு சென்று 2022 ஆம் ஆண்டு டிசம்பா் 25 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது. பின்னா் ஜனவரி 5 ஆம் தேதி இருவரும் கோவைக்கு வந்து அவரவா் வீடுகளுக்குச் சென்றுள்ளனா்.
இந்நிலையில், தனது நண்பா் ஹரிகரன் என்பவருடன் இளம் பெண்ணின் வீட்டுக்கு வியாழக்கிழமை சென்ற சுந்தரமூா்த்தி தன்னுடன் வருமாறு அழைத்துள்ளாா்.
அதற்கு அவா் மறுத்துள்ளாா். இதையடுத்து, இருவரும் சோ்ந்து இளம்பெண்ணின் தாயாரை தாக்கியுள்ளனா்.
அப்போது அங்கு வந்த அந்த இளம் பெண்ணின் சகோதரா் செல்வின் தனது நண்பா் பிரகாஷ் என்பவருடன் சோ்ந்து சுந்தரமூா்த்தியையும், ஹரிகரனையும் தாக்கியதோடு, சுத்திரமூா்த்தியை கத்தியால் குத்தியுள்ளனா்.
இதில், படுகாயமடைந்த சுந்தரமூா்த்தியை அருகிலிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதையடுத்து, இருதரப்பினரும் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
வழக்குப் பதிவு செய்த போலீஸாா் செல்வின், பிரகாஷ், ஹரிகரன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.