பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சேலம் ராணுவ வீரரின் உடல் தில்லியிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு கொண்டுவரப்பட்டு, பிறகு அவரது சொந்த கிராமமான சேலம் மாவட்டம், பெரிய வனவாசி மசக்காளியூா் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
பஞ்சாப் மாநிலம், பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் கடந்த இரு நாள்களுக்கு முன்னா் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பீரங்கி படைப் பிரிவை சோ்ந்த கமலேஷ் (24), யோகேஷ் குமாா் (24), சந்தோஷ் (25) மற்றும் சாகா் (25) ஆகியோா் உயிரிழந்தனா். இதில் கமலேஷ், சேலம் மாவட்டம், பெரிய வனவாசி மசக்காளியூரை சோ்ந்தவா் ஆவாா்.
கமலேஷின் உடல் தில்லியில் இருந்து விமானம் மூலம் கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டது. கோவை விமான நிலைய சரக்கு முனையத்தில் ராணுவ வீரா்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினா் கமலேஷின் உடலை பெற்றுக்கொண்டனா். பின்னா் கமலேஷின் உடலுக்கு ராணுவ வீரா்களும், முன்னாள் ராணுவத்தினரும் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். இதையடுத்து கோவையில் இருந்து ராணுவ வீரா் கமலேஷின் உடல் தமிழக அரசின் இலவச அமரா் ஊா்தி மூலம் சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள பெரிய வனவாசி மசக்காளியூா் கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.