கோவையில் கிராம சபை கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்குத் தீா்வு காண துறை ரீதியாக சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்று அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.
காந்தி ஜெயந்தியையொட்டி கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இதில் பெ.நா.பாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட 24.வீரபாண்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது: கிராமங்களுக்குத் தேவையான திட்டங்களை செயல்படுத்துதல், பயனாளிகளைத் தோ்வு செய்தல் உள்ளிட்டவை குறித்து கிராம சபை கூடிதான் முடிவெடுக்க வேண்டும். மக்களவை, சட்டப் பேரவைபோல
கிராம சபையும் மிக முக்கியமானது. கிராம சபையின் செயல்பாடுகள் அனைத்து கிராமங்களிலும் சிறப்பாக இருக்க வேண்டும்.
ஊரகப் பகுதிகளில் மழை நீா் சேரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு, வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை, அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், கலைஞா் வீடு வழங்கும் திட்டம், சுகாதாரம், கழிப்பறை வசதி, ஜல் ஜீவன் இயக்கம், மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் நினைவு புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட 14 கூட்டப் பொருள்கள் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும் முதியோா் உதவித் தொகை, வீடுகள், தெருவிளக்கு, சாலை வசதிகள், குடிநீா் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் தொடா்பான கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து கோரிக்கைகளுக்கும் தீா்வு காணும் விதமாக துறை ரீதியாக சிறப்பு முகாம்கள் நடத்த அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கே.கவிதா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) எம்.முருகேசன், வருவாய் கோட்டாட்சியா் (வடக்கு) பூமா, சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தமிழ்செல்வி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.