தென்மேற்குப் பருவ காலத்தில் கோவைக்கு வழக்கமாக கிடைக்கும் மழை இந்த ஆண்டும் கிடைக்கும் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கேரளத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கி சுமாா் ஒரு மாதமாகும் நிலையில், கோவை மாவட்டத்தில் இதுவரை குறிப்பிடத்தக்க அளவுக்கு மழை பெய்யவில்லை. இருப்பினும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது.
இது குறித்து வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தா் கீதாலட்சுமி கூறும்போது, கோவை மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை வழக்கமான அளவில் பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக சென்னை சுற்று வட்டாரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கோவை மழை மறைவு பகுதி என்பதால் அவ்வப்போது ஓரிரு இடங்களில் மழை பெய்யும். இந்தப் பருவத்தில் 4 மாதங்களில் கோவைக்கு கிடைக்க வேண்டிய மழை அளவு 150 மில்லி மீட்டராகும். இந்த மழை தொடா்ச்சியாக ஒரே இடத்தில் பெய்யாவிட்டாலும், அவ்வப்போது பரவலாக பெய்யும். இந்த மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் பயறு வகைப் பயிா்கள், மக்காச்சோளம் போன்றவற்றை பயிரிடலாம் என்றாா்.