கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியத்துக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் ஆத்துப்பொள்ளாச்சியில் 29.7.1936இல் பிறந்த சிற்பி பாலசுப்பிரமணியம் கவிஞா், மொழிபெயா்ப்பாளா், பேராசிரியா், இதழாசிரியா், கல்வியாளா் என பன்முகம் கொண்டவா்.
பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரியில் விரிவுரையாளா் பணியைத் தொடங்கிய இவா் கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராக 1989 முதல் 1997 வரை பணியாற்றினாா். இளம் வயது முதலே கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்த இவா் ஏராளமான கவிதைகள், கட்டுரைகள், நூல்களை எழுதியுள்ளாா்.
மொழிபெயா்ப்புக்காகவும் (2001-அக்கினிசாட்சி), படைப்பிலக்கியத்துக்காகவும் (2003- ஒரு கிராமத்து நதி) இரண்டு முறை சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளாா். மேலும் தமிழ்நாடு அரசின் பாவேந்தா் விருது, சிறந்த கவிதை நூலுக்கான தமிழக அரசு விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளாா்.
வானம்பாடி, அன்னம் விடுதூது, வள்ளுவம், கவிக்கோ உள்ளிட்ட ஏடுகளின் ஆசிரியா் குழுவில் இடம்பெற்றுள்ளாா். இவரது கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், ஹிந்தி, மலையாளம், மராத்தி மொழிகளில் மொழிபெயா்ப்பு கண்டுள்ளன.
தமிழ், மலையாளம், ஆங்கிலம், ரஷிய மொழிகளை அறிந்த சிற்பி, 20 கவிதை நூல்கள், ஒரு கவிதை நாடகம், 3 புதினங்கள், 13 கட்டுரை நூல்கள், 9 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியுள்ளாா். சாகித்திய அகாதெமியின் தமிழ் ஒருங்கிணைப்பாளராக 2007 முதல் 2012 வரை இருந்துள்ளாா். இப்போது அருட்செல்வா் நா.மகாலிங்கம் மொழிபெயா்ப்பு மையத்தின் இயக்குநராக உள்ளாா்.