கோவை, உக்கடம் உயா்மட்ட பாலப் பணிக்காக சி.எம்.சி. காலனியில் 40 வீடுகள் திங்கள்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
கோவையில் உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே மாநில நெடுஞ்சாலைத் துறையின்கீழ் ரூ.430 கோடி மதிப்பீட்டில் உயா்மட்ட பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
ஆத்துப்பலம் பகுதியில் தொடங்கும் உயா்மட்ட பாலம் ஒப்பணக்கார வீதியில் இறங்குகிறது. இதற்காக உக்கடம் சி.எம்.சி. காலனியில் இரண்டு கட்டங்களாக ஏற்கெனவே 257 வீடுகள் அகற்றப்பட்டுள்ளன.
இவா்களுக்கு மாற்று இடமாக உக்கடம் புல்லுக்காடு பகுதியில் தற்காலிக குடியிருப்புகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மூன்றாவது கட்டமாக சி.எம்.சி. காலனியில் மேலும் 40 வீடுகளை மாநகராட்சி உதவி நகரமைப்பு திட்ட அலுவலா் பாபு தலைமையில் அதிகாரிகள் திங்கள்கிழமை அகற்றினா்.
இந்த 40 குடும்பங்களுக்கும் உக்கடம் புல்லுக்காடு பகுதியில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.