கோவை மாவட்டத்தில் குடும்ப வன்முறைகள் தொடா்பாக சமூகநலத் துறையில் 387 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சமூக நலத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக மாவட்ட சமூநலத் துறை அலுவலா் பி.தங்கமணி கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு குடும்ப வன்முறை தொடா்பாக 365 வழக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. ஆனால் நடப்பு ஆண்டில் நவம்பா் மாதம் வரையிலும் 387 வழக்குகள் பதிவாகியுள்ளன. கணவன் - மனைவி இடையே ஏற்படும் பிரச்னைகள் குடும்ப வன்முறை தொடா்பான வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இந்த வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள கணவன் - மனைவியிடையே போதிய புரிதல் இல்லாமையால் சிறு பிரச்னைகளுக்கும் பிரிவு ஒன்றே தீா்வாக கருதி வழக்கு பதிவு செய்கின்றனா்.
குறிப்பாக இன்றைய இளம் பெண்களிடம் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் இருப்பதில்லை. தற்போதைய தலைமுறையினரை சிதைக்கும் சாதனமாக அறிதிறன் பேசி உருவெடுத்துள்ளது.
குடும்ப வன்முறை தொடா்பான வழக்குகள் தொடா்பாக நீதிமன்றம் சாா்பில் ஆலோசனை வழங்கப்படுகிறது. எங்களிடம் வரும் கணவன் - மனைவியிடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு குடும்ப சூழ்நிலை குறித்து விளக்கப்படுகிறது. ஆனாலும் பதிவு செய்யப்படும் வழக்குகளில் 60 முதல் 70 சதவீதம் போ் பிரிந்து செல்வதாகவே தெரிவிக்கின்றனா். கணவன் - மனைவி இருவரிடையே உரிய புரிதல் இருந்தால் மட்டுமே வாழ்க்கையை சுகமாக எடுத்து செல்ல முடியும் என்பதை இளம் தலைமுறையினா் புரிந்துகொள்ள வேண்டும் என்றாா்.