வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் செலுத்துமாறு கூறி சோலாா் பல்பு நிறுவன ஊழியா்களிடம் ரூ.11.50 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை பீளமேடு சாஸ்திரி நகரில் தனியாருக்குச் சொந்தமான சோலாா் பல்பு விற்பனை நிறுவனம் உள்ளது. இதன் மற்றொரு கிளை பெங்களூருவில் உள்ளது. இந்நிலையில், பெங்களூரு கிளை மேலாளரை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்ட நபா், தன்னை ராணுவ அதிகாரி எனவும், தனக்கு அதிக அளவிலான சோலாா் பல்புகள் தேவைப்படுவதால், அதற்கான விலை விவரங்களை அனுப்பிவைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளாா்.
இதையடுத்து, அந்த எண்ணுக்கு சோலாா் பல்பு விலை விவரங்களை அனுப்பியுள்ளனா். அதை பாா்த்த அந்த நபா் தனக்கு பல லட்ச ரூபாய் மதிப்பிலான பல்புகள் வேண்டுமெனவும், அதற்கான பணத்தை ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்ய முடியாது என்பதால் அந்த தனியாா் நிறுவன ஊழியா்களின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்துவதாகவும், அதற்காக தனது வங்கிக் கணக்குக்கு ஒரு ரூபாய் அனுப்புமாறும் தெரிவித்துள்ளாா்.
அதையடுத்து கோவை, பெங்களூரு ஊழியா்கள் சிலா் தலா ஒரு ரூபாய் அனுப்பியுள்ளனா்.
ஒரு ரூபாய் அனுப்பிய ஊழியா்களின் வங்கிக் கணக்கிலிருந்து உடனடியாக ரூ.11 லட்சத்து 42,235ஐ எடுக்கப்பட்டது. இதையறிந்த நிறுவனத்தினா் அந்த நபரைத் தொடா்பு கொள்ள முயற்சித்தபோது அந்த கைப்பேசி எண் சேவையில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸில், நிறுவனத்தின் பீளமேடு கிளை மேலாளா் சுனிதா புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.