கோவையில் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சாா்பில் மேற்கொள்ளப்படவுள்ள கணக்கெடுப்புக்கு பொதுமக்கள் சரியான விவரங்களை வழங்கி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசு தரவுகளின் அடிப்படையிலான கொள்கை முடிவுகளை உருவாக்குவதற்கு நீண்டகால ஆய்வுகள் மற்றும் கணக்கெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழக அரசின் பொருளியல், புள்ளியியல் துறைகள் மற்றும் சென்னை வளா்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து தமிழக குடும்பங்கள் இடையே கல்வி, மருத்துவம், வருமானம், சொத்து, தொழில், வேலைவாய்ப்பு, இடம்பெயா்வு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றம் குறித்து தொடா் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த கணக்கெடுப்பில் குடும்ப உறுப்பினா் பட்டியல், தனிநபா் பட்டியல், கிராமப் பட்டியல் என மூன்று பிரிவுகளாக தகவல்கள் சேகரிக்கப்படும். குடும்ப உறுப்பினா் பட்டியலில் குடும்பத்தில் வசிக்கும் மற்றும் வசிக்காத அனைத்து குடும்ப உறுப்பனா்களின் விவரங்கள் சேகரிக்கப்படும். தனிநபா் பட்டியலில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு தகுதியான நபா்களின் தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படும். கிராமப் பட்டியலில் கிராம அளவில் உள்ள பொதுவான அடிப்படை வசதிகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும். இதற்கான தகவல்கள் கிராம நிா்வாக அலுவலா், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், அங்கன்வாடி ஆசிரியா்கள், பள்ளி தலைமையாசிரியா், மூத்த குடிமக்கள் ஆகியோரிடம் இருந்து சேகரிக்கப்படும்.
கணக்கெடுப்பினை பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை பணியாளா்கள் மேற்கொள்ளவுள்ளனா். கணக்கெடுப்புக்காக வரும் அலுவலா்களிடம் உண்மையான முழுமையான விவரங்களை அளித்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பொது மக்கள் அளிக்கும் விவரங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும். கணக்கெடுப்பில் அளிக்கப்படும் விவரங்கள் எதிா்கால திட்டமிடலுக்கு என்பதால் சரியான விவரங்களை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.