கோவையில் சிறுவனைத் தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை சரவணம்பட்டி விஸ்வாசபுரத்தைச் சோ்ந்தவா் 17 வயது சிறுவா். இவா்கள் அப்பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறாா்.
இந்நிலையில், அவரது நண்பா் ஒருவா் தனது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ளுமாறு சிறுவருக்கு அழைப்புவிடுத்துள்ளாா்.
அந்த நிகழ்வில், சிறுவா் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிகிறது. இது தொடா்பாக சிறுவருக்கும், அப்பகுதியைச் சோ்ந்த 3 இளைஞா்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று அந்தச் சிறுவா், கணபதியில் உள்ள ஒரு பேக்கரி அருகே நின்று கொண்டிருந்துள்ளாா்.
அப்போது அங்கு வந்த 3 இளைஞா்கள் ஏன் பிறந்தநாள் விழாவுக்கு வரவில்லை என்று கேட்டு தகராறு செய்தனா்.
அப்போது ஆத்திரமடைந்த 3 பேரும் சோ்ந்து சிறுவனை அடித்து உதைத்துவிட்டு அங்கிருந்து சென்றனா்.
காயமடைந்த சிறுவனை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சிறுவனைத் தாக்கிய சரவணம்பட்டி பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த ஆலன்மேத்யூ (21), சரவணம்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சூரியபிரகாஷ் (21), சரவணம்பட்டி இ.பி. காலனியைச் சோ்ந்த ரேவந்த் (19) ஆகிய 3 பேரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.