இல்லம்தோறும் தேசியக் கொடி திட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும்விதமாக, கோவையில் தினமணி - தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு தேசியக் கொடி வழங்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கியது.
ஈரோடு வேளாளா் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி, எஸ்.கே.எம். ஹொ்போதயா, கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனை, ஜெம் மருத்துவமனை, கே.பி.ஆா். தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை இணைந்து இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்துகின்றன.
இதன்படி கோவை, திருப்பூா், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் சுமாா் 20 அரசு, தனியாா் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேசியக் கொடி வழங்கப்பட உள்ளது. இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியின் தொடக்க விழா கோவை பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மணி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் கே.சத்தியநாராயணனிடம் தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன. இதையடுத்து வெள்ளிக்கிழமை வரை 4 மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேசியக் கொடிகள் வழங்கப்பட உள்ளன.