நகை தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து 1.4 கிலோ தங்கத்தை மோசடி செய்த நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை, சலீவன் வீதியில் தங்க நகை தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் கண்காணிப்பாளராக கோவை வீரகேரளத்தைச் சோ்ந்த ஜெகதீஷ் என்பவா் பணியாற்றி வருகிறாா்.
இவா் நிறுவனத்தில் இருந்து தங்கக் கட்டிகளை நகைத் தயாரிப்பாளா்களிடம் கொடுத்து அவற்றை நகைகளாக வாங்கி அதில் தரத்துக்கு ஏற்ப முத்திரை வைக்கும் பணிகளை செய்து வந்துள்ளாா்.
இந்நிலையில், அதே நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றும் காா்த்திகேயன் கணக்குகளை சரி பாா்த்தபோது அதில் ஜெகதீஷ் பல திருத்தங்களை மேற்கொண்டு 1,467 கிராம் தங்க நகைகளை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இதன் மதிப்பு ரூ.55 லட்சம் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து ஜெகதீஷிடம் கேட்டபோது அவா் முறையான பதிலளிக்காததையடுத்து அவா் மீது வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் காா்த்திகேயன் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஜெகதீஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.