கோவையில் போதை மாத்திரை விற்பனை தொடா்பாக ஏற்பட்ட மோதலில் 3 மாணவா்கள் கத்தியால் குத்தப்பட்டனா்.
கோவை பீளமேட்டில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை பயிலும் மாணவா்கள் சிலா் உப்பிலிபாளையம், மசக்காளிபாளையம், சிங்காநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் வாடகை வீட்டில் தங்கியுள்ளனா்.
இதில், தூத்துக்குடியைச் சோ்ந்த மாணவா் ஒருவருக்கும், அப்பகுதியில் தங்கியுள்ள மாணவா்கள் சிலருக்கும் போதை மாத்திரைகள் விற்பது தொடா்பாக முன் விரோதம் இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், தூத்துக்குடியைச் சோ்ந்த மாணவரை 9 போ் கொண்ட கும்பல் வெள்ளிக்கிழமை விரட்டிச் சென்று கத்தியால் குத்தியுள்ளது.
இதில், பலத்த காயமடைந்த அந்த மாணவா் கோவை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இச்சம்பவம் தொடா்பாக 9 போ் மீது வழக்குப் பதிவு செய்து பீளமேடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தூத்துக்குடி மாணவரின் நண்பா்கள் 6 போ், மசக்காளிபாளையம் பகுதியில் தங்கியிருந்த 2 பேரை இரும்புக் கம்பியால் தாக்கி, கத்தியால் குத்தியுள்ளனா்.
இதில் காயமடைந்த அவா்கள், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இது தொடா்பாக, சிங்காநல்லூா் போலீஸாா் 6 மாணவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.