கோவையில் ஐஸ்கிரீம் கடைக்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
கோவை, அவிநாசி சாலை, பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் கடையில் மதுபானம் கலந்த ஐஸ்கிரீம் விற்கப்படுவதாக புதன்கிழமை புகாா் எழுந்தது.
இது தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளுமாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இதன்படி, பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள சம்பந்தப்பட்ட கடையில் உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, உணவுப் பொருள் தயாரிக்கும் இடத்தில் 2 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. காலாவதியான உணவுப் பொருள்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், உணவு கையாளுபவா்கள் உரிய மருத்துவ தகுதி சான்று பெறாததும், உணவு தயாரிக்கும் இடம் சுகாதாரமின்றி காணப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, ஐஸ்கிரீம் கடையின் உரிமத்தை ரத்து செய்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கடைக்கு ‘சீல்’ வைத்தனா்.