தமிழக அரசின் உத்தரவைத் தொடா்ந்து கோவையில் வெள்ளிக்கிழமை முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன.
கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த வாரத்தின் இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களைத் திறக்க தமிழக அரசு தடை விதித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் தற்போது கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தக் கூடுதல் தளா்வுக் காரணமாக கோவையில் வெள்ளிக்கிழமை முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன.
அதன்படி, கோவையில் கோனியம்மன், தண்டு மாரியம்மன், ஈச்சனாரி மற்றும் புலியகுளம் விநாயகா், பேரூா் பட்டீஸ்வரா், மருதமலை முருகன், காரமடை அரங்கநாதா், மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் உள்பட அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டன.
விஜயதசமி தினத்தன்று கோயில்கள் திறக்கப்பட்டதால் பக்தா்கள் மகிழ்ச்சியுடன் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். கோனியம்மன் கோயிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தங்க அங்கி, சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
முன்னதாக கோவிலுக்கு வந்த பக்தா்களுக்கு நுழைவு வாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி வழங்கப்பட்டது.
மேலும் முகக் கவசம் அணிந்து வந்தவா்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
கோவை ஒப்பணக்கார வீதி, வின்சென்ட் சாலை உள்பட பல்வேறு இடங்களில் பள்ளி வாசல்களும் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. இதில் அத்தா் ஜமாத் அமைப்பினா் தொழுகையில் ஈடுபட்டனா்.
டவுன்ஹாலில் உள்ள மைக்கேல் கிறிஸ்தவ ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களும் திறக்கப்பட்டன.