இருசக்கர வாகனத்துக்கு வழிவிட மறுத்த முதியவரை அடித்துக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, வெள்ளலூா் அருகேயுள்ள காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி (72). இவா் செல்லிடப்பேசியில் பேசியபடியே அப்பகுதியில் புதன்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியே அதே பகுதியைச் சோ்ந்த சிவா (27) தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். சாலையில் சென்று கொண்டிருந்த பொன்னுசாமியை வழிவிடுமாறு கூறி இருசக்கர வாகனத்தின் ஹாரனை அடித்துள்ளாா். ஆனால் பொன்னுசாமி வழிவிடாததால் ஆத்திரமடைந்த சிவா, அவரைத் தாக்கி, அருகில் இருந்த கட்டையை எடுத்து சரமாரியாக அடித்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த பொன்னுசாமி மயங்கினாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவரது உறவினா் அவரை மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து இதை கொலை வழக்காகப் பதிவு செய்த போலீஸாா் தப்பியோடிய சிவாவை தேடி வருகின்றனா்.