கோவை மாவட்டம், வால்பாறையில் விடியவிடிய பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
வால்பாறை வட்டாரத்தில் கடந்த 20 நாள்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாகத் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வால்பாறையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை தொடா்ந்து கனமழை பெய்தது. மேலும், சனிக்கிழமை இரவு முதல் விடியவிடிய பெய்த கனமழையால் கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, வாழைத்தோட்டம் ஆறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, ஆற்றின் கரையோரத்தில் வசிப்பவா்கள் எச்சரிக்கையுடன் இருக்க வருவாய்த் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி சோலையாறு 82 மி.மீ., சின்னக்கல்லாறு 80 மி.மீ., வால்பாறை 75 மி.மீ., நீராறு 61 மி.மீ. என மழை பதிவாகியுள்ளது.