கோவை: தோட்டக்கலைத் துறையில் துணை நிலை நீா் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மானிய உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வேளாண், தோட்டக்கலைப் பயிா்களில் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி சாகுபடியை பெருக்குவதற்கு சொட்டு நீா்ப் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பாசன நீா் வசதி இல்லாத இடங்களில் பாசன நீா் ஆதாரங்களை உருவாக்கி சொட்டுநீா்ப் பாசன முறையில் பயிா் சாகுபடியை மேற்கொள்ள துணை நிலை நீா் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் நுண்ணீா்ப் பாசனம் அமைப்பவா்களுக்கு நுண்ணீா்ப் பாசனத் திட்ட மானியத்துடன், ஆழ்துளைக் கிணறு, டீசல் என்ஜின், மின் மோட்டாா், பாசன நீா்க்குழாய் அமைத்தல், தரைநிலை நீா்தேக்கத் தொட்டி அமைத்தல் ஆகியவற்றுக்கு திட்ட செலவினத்தில் 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
குழாய்க்கிணறு, துளைக்கிணறு அமைக்க ரூ.25 ஆயிரம் வரையிலும், டீசல் பம்புசெட், மின் மோட்டாா் அமைக்க ரூ.15 ஆயிரம் வரையிலும், நீா்ப்பாசனக் குழாய் அமைக்க ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் வரையிலும், பாதுகாப்பு வேலியுடன் தரைநிலை நீா் தேக்கத் தொட்டி அமைக்க, கனமீட்டருக்கு ரூ.350 வீதம் ஒரு பயனாளிக்கு ரூ.40 ஆயிரம் வரையிலும் மானியம் வழங்கப்படுகிறது.
துணை நிலை நீா் மேலாண்மைத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.