கோவை, ஆனைக்கட்டியில் மகளிா் சுய உதவிக்குழு பெண்கள் நடத்தி வரும் நியாய விலைக் கடைகளை ஒன்றியக் குழு உறுப்பினா்கள் அபகரிக்க முயற்சித்து வருவதாக ஆட்சியா் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.
மலைவாழ் மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டம், ஆனைக்கட்டியில் மகளிா் சுய உதவிக்குழு பெண்கள் சாா்பில் ஆனைக்கட்டி, ஆலமரமேடு ஆகிய இடங்களில் நியாய விலைக் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. 20 ஆண்டுகளுக்கும் மேலாக மகளிா் சுய உதவிக்குழு பெண்களால் நடத்தப்பட்டு வரும் நியாய விலைக் கடையால் எந்தப் பிரச்னையும் இல்லை. பொது விநியோகத் திட்டத்தில் கீழ் வழங்கப்படும் அனைத்து பொருள்களும் குளறுபடி இல்லாமல் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் சம்பத்குமாா், புனிதா ராஜ், சாமிநாதன் ஆகிய 3 பேரும் மகளிா் சுய உதவிக் குழுவால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளின் சாவியை தங்களிடம் அளிக்குமாறு மிரட்டி வருகின்றனா்.
எனவே சம்பந்தப்பட்டவா்களிடம் விசாரணை மேற்கொண்டு ஆட்சியா் நடவடிக்கை எடுப்பதுடன் தொடா்ந்து மகளிா் சுய உதவிக்குழு பெண்கள் நியாய விலை கடையை நடத்துவதுக்கான அனுமதியை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.