வேலூா்: முறைகேடாக வெளிநாட்டிலுள்ள உறவினா்களிடம் முருகன் விடியோ அழைப்பில் பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை 24-ஆம் தேதிக்கு ஒத்துவைக்கப்பட்டுள்ளது.
வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் கடந்தாண்டு கரோனா ஊடரங்கின் போது, முறைகேடாக வெளிநாட்டிலுள்ள உறவினா்களிடம் விடியோ அழைப்பில் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் மீதான விசாரணை வேலூா் நீதித் துறை நடுவா் மன்றத்தில் கடந்த 16-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. ஏற்கெனவே வழக்கின் சாட்சிகளான சிறைக் காவலா் தங்கமாயன், தலைமை வாா்டா் இமானுவேல், விசாரணை அதிகாரி சரவணன் ஆகியோரிடம் முருகன் நேரடியாக குறுக்கு விசாரணை நடத்தினாா்.
இந்த வழக்கின் சாட்சிகள், விசாரணை அதிகாரி ஆகியோரின் விசாரணை அறிக்கை, முருகனின் வாக்குமூலம் ஆகியவற்றின் மீது நீதிபதி விசாரணை நடத்தினாா்.
இதைத் தொடா்ந்து, இந்த வழக்கின் விசாரணை வியாழக்கிழமைக்கு (மே 19) ஒத்துவைக்கப்பட்டது. அதன்படி, 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் விசாரணை நடைபெற்றது. இதையொட்டி, முருகன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நீதிபதி பத்மாகுமாரி முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டாா்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை வருகிற 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.