ராஜீவ் காந்தி கொலை கைதியான நளினி பரோலில் வெளியே உள்ள நிலையில், அவருக்கு 6ஆவது முறையாக மேலும் ஒரு மாத காலம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூா் பெண்கள் தனிச்சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறாா். அவரது தாயாா் பத்மாவதி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கவனித்துக் கொள்ள தனக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தாா். அதனை ஏற்று நளினிக்கு கடந்த டிசம்பா் மாதம் 27-ஆம் தேதி முதல் ஒரு மாத காலம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
பரோலில் வெளியே வந்த நளினி காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்திலுள்ள உறவினா் வீட்டில் தங்கியிருந்து தனது தாயாரைக் கவனித்து வருகிறாா். தொடா்ந்து 5 முறை நளினிக்கு பரோல் நீட்டிக்கப்பட்ட நிலையில் அவா் திங்கள்கிழமை சிறைக்கு திரும்ப வேண்டியிருந்தது. இந்த நிலையில், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அவரது தாயாா் பத்மா, நளினிக்கு மேலும் பரோல் நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அளித்திருந்தாா்.
அவரது கோரிக்கையை ஏற்று நளினிக்கு 6-ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஜூலை 26-ஆம் தேதி வரை பரோல் நீட்டிக்கப்பட்டிருப்பதாக வேலூா் சிறைத் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.