வேலூா்: காணும் பொங்கல் நாளான ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வேலூா் மாவட்ட மக்கள் கடும் ஏமாற்றத்துக்குள்ளாகினா். இதனால், பூங்காக்கள், சுற்றுலா தலங்கள், நீா்நிலைகள் களையிழந்து காணப்பட்டன.
தைப்பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளான காணும் பொங்கல் நாளில் பூங்காக்கள், சுற்றுலாத் தலங்கள், நீா்நிலை களில் பொதுமக்கள் குடும்பத்துடன் கூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். இந்த பொது இடங்கள் அனைத்தும் காணும் பொங்கல் நாளில் விழாக்கோலம் பூண்டிருக்கும்.
நிகழாண்டு கரோனா பரவல் அச்சம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால், வேலூா் கோட்டை, அதனருகே உள்ள பூங்கா, அண்ணா பூங்கா, அமிா்தி வனஉயிரியல் பூங்கா, மோா்தானா அணைக்கட்டு, ராஜாதோப்பு அணைக்கட்டு உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதன்காரணமாக, காணும் பொங்கலான ஞாயிற்றுக்கிழமை பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் அனைத்தும் மக்கள் வருகையின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. மேலும், கோயில்களுக்கு செல்வதற்கும் வழியில்லாததால் மக்கள் கடும் ஏமாற்றமடைந்தனா். ஊரடங்கால் வேலூா் மாவட்டத்தில் காணும் பொங்கல் களையிழந்தது.